பதிவு செய்த நாள்
16
ஏப்
2014
10:04
அழகர்கோவில் : அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, நேற்று ஸ்ரீதேவி, பூமாதேவி, கல்யாணசுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகியோருக்கு சுந்தரராஜ பெருமாள் மங்கள நாண் அணிவித்து திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயில் பங்குனித் திருவிழா ஏப்., 11ல் துவங்கியது. நேற்று காலை திருக்கல்யாணம் நடந்தது. காலை 9.15 மணிக்கு மணமக்கள் திருமண அலங்காரம் முடிந்து, பல்லக்கில் புறப்பட்டனர். காலை 9.45 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தை அடைந்தனர். காலை 10.30 மணிக்கு ஹோமம் வளர்க்கப்பட்டு, பூஜைகள் நடந்தன. பின், சுவாமி, அம்பாள்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி, கோ பூஜை, மங்கள ஆராதனைகள் நடந்தன. திருகல்யாண பட்டாடைகள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். காலை 11.15 மணிக்கு வேத மந்திரங்கள் ஒலிக்க, பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள்கயிறு கொண்ட பாக்கெட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி வரதராஜன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.