பதிவு செய்த நாள்
16
ஏப்
2014
10:04
மதுரை : மாவட்ட மனநல திட்டத்தின் மூலம், மதுரையில் கிராமப்புற சாமியாடிகளுக்கு பயிற்சி அளித்து, அப்பகுதி மக்களின் மனநோய்க்கு தீர்வு காணப்படுகிறது. இதுகுறித்து, அதன் மாநில திட்ட அலுவலர் ராமசுப்ரமணியன் கூறியதாவது:பில்லி, சூனியம், செய்வினைக் கோளாறு என்ற பெயரில், மனநோய்களுக்கு சிகிச்சை பெறுவோர் அதிகம். மனநோய் என்றால், சமுதாயத்தால் விலக்கி வைக்கப்படுகின்றனர். யாரோ ஒருவர் நமக்கு கெடுதல் செய்து விட்டார். அதனால் தான் திடீரென குணம் மாறி பேசுகிறார், பிரச்னை செய்கிறார் என, யார் மீதோ பழிபோட்டு, பில்லி, சூனியம் வைப்பவர்களை நாடுகின்றனர். இதனால் நோய் முற்றிய நிலையில், சிகிச்சை அளிப்பதும் கடினம். பூரண குணமடைவதும் கடினம்.நோய் முற்றும் போது நோயாளிகளை சங்கிலியால் கட்டிப் போடுவது, அடித்து துன்புறுத்துவது, அவமரியாதை செய்வதால், தனிமனித உரிமைகளுக்கு எதிராக செயல்படுகிறோம். மனநோய் என்று அறியாமல், தனிமனித துன்புறுத்தல்களை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.மனநோய் டாக்டர் எடுத்துச் சொன்னாலும், கிராம மக்கள் சட்டென ஏற்றுக் கொள்வதில்லை. மக்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளை, கலாசார பழக்கவழக்கங்களை சிதைக்கவும் கூடாது. அதேநேரத்தில், மனநோய் உள்ளவர்களுக்கு, சிகிச்சையும் அளிக்கவேண்டும். எனவே, மதுரையில் கிராமக் கோயில்களில் உள்ள சாமியாடிகளுக்கு, சிறப்பு விழிப்புணர்வு பயிற்சி அளித்தோம். இதுவரை 300 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். மனநோய், அதன் வகைகள், எப்படி கண்டறிவது, மாத்திரைகளை சாப்பிட வேண்டியதன் கட்டாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.சாமியாடிகள், இப்பகுதி குடும்பத்தினரை அறிந்தவராக இருப்பதால், குடும்பத்தில் நிகழும் சிறு சிறு பிரச்னைகளுக்கு, சாமியாடிகளிடம் தீர்வு காண வருகின்றனர். அந்த மத நம்பிக்கையோடு சேர்த்து, சாமியாடிகள் மூலம் வரும் மனநோய் உள்ளவர்களுக்கு, இலவச மாத்திரைகள், வழங்குகிறோம். இம்முயற்சிக்கு, நல்ல பலன் கிடைத்துள்ளது. மதுரையில் தாலுகா அளவில் உள்ள மனநல மையங்களில், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.எந்தவகையான மனநோயாக இருந்தாலும், ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்தால், சிகிச்சையின் மூலம் எளிதில் குணப்படுத்தலாம் அல்லது கட்டுப்படுத்தலாம். மனநோய் மட்டுமின்றி புகையிலை, போதை பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கும், சிகிச்சை அளிக்கப்படுகிறது.இவ்வாறு கூறினார்.