குளித்தலை: தோகைமலை அருகே கள்ளை காளியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று எருமை கிடா வெட்டி வழிபட்டனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகில் கள்ளை காளியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி விழாவின் முதல் நாள் அம்மனுக்கு பூப்போடுதல், கரகம் பாலித்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து கருப்பசாமி குட்டி குடித்தல், தேவராட்டம், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. அதன்பின் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. அப்போது பகவதி அம்மன் முத்து பல்லக்கிலும், கருப்பசாமி குதிரை வாகனத்திலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதன்பின் காளியம்மன் தேர், முத்து பல்லக்கு, குதிரை வாகனம் கோவில் வளாகம் வந்தவுடன் அங்கு நேர்த்திக்கடனுக்காக எருமை கிடாக்கள் வெட்டப்பட்டன. மஞ்சள் நீராடுதல், கரகம் எடுத்து விடுதல் நிகழ்ச்சிகள் நடந்தன.