பதிவு செய்த நாள்
22
ஏப்
2014
10:04
நாமக்கல்: மழை வேண்டி, ராஜகணபதி கோவிலில், வருண ஜெப ஹோமம் நடந்தது. அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். தமிழகத்தில், பருவமழை பொய்த்து போனதால், ஆறு, ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில், தண்ணீர் வற்றியது. அதனால், மக்களின் அனைத்து தேவைகளுக்கும், தண்ணீர் பற்றாக்குறையாகவே இருந்து வருகிறது. மழை பொழியவும், மக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்க வேண்டும் என, மாநிலம் முழுவதும், பல்வேறு சிறப்பு யாகம், ஹோமம் செய்து வருகின்றனர். அவ்வாறு செய்தால், மழை பொழியும் என்பது ஐதீகம். அதன்படி, நாமக்கல்-திருச்சி சாலை மாருதி நகரில், ராஜகணபதி கோவில் உள்ளது. இங்கு, முதன் முதலாக, மழை வேண்டி, வருண ஜப ஹோமம், நேற்று நடந்தது. காலை, 7 முதல், மதியம், 1 மணி வரை, ஹோமம் தொடர்ந்தது. மிகப்பெரிய ஐந்து பாத்திரங்களில், தண்ணீர் நிரப்பி, அதில் சிவாச்சாரியார்கள் அமர்ந்து, வருண ஜப ஹோமம் செய்தனர். அதை தொடர்ந்து, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகச்ம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில், ஸ்வாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர்.