புதுச்சேரி: வில்லியனூர் மாதாக் கோயிலில் 13-வது ஆண்டு பெரு விழா நாளை (26-ம் தேதி) துவங்குகிறது. வில்லியனூர் மாதா கோவில் பங்கு தந்தை ரிச்சர்ட் அடிகளார் கூறியது, வில்லியனூரில் அமைந்துள்ள தூய லூர்த்து அன்னை திருத்தலம் வரலாற்று சிறப்புமிக்கது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிவடைந்த 6-வது நாளில் ஆண்டுத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இந்தாண்டு மாதா கோவில் ஆண்டு பெருவிழா நாளை (26-ம் தேதி) துவங்குகிறது. அன்று அதிகாலை 5:30 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள ஜெப மண்டபத்தில் சுல்தான்பேட்டை மறை மாநிலத்தின் புதிய ஆயர் பீட்டர் அபீர் தலைமையில் திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து மாதா குளத்தைச் சுற்றி திருக்கொடி பவனி நடக்கிறது. திருத்தல ஆலயத்தின் முன்பு புதிதாக கட்டப்பட்டுள்ள கொடி மரத்தில் ஆயர் கொடியேற்றி ஆண்டு பெருவிழாவைத் துவக்கி வைக்கிறார்.விழாவையொட்டி தினந்தோறும் மாலையில் திருப்பலி, மறையுரை மற்றும் தேர்பவனி நடக்கிறது. மே 4-ம் தேதி காலை 7:30 மணிக்கு திருப்பலிக்குப்பின் கொடி இறக்க நிகழ்ச்சியுடன் ஆண்டு பெருவிழா நிறைவடைகிறது. இவ்வாறு பங்கு தந்தை ரிச்சார்ட் அடிகளார் கூறினார்.