சென்னிமலை: சிவன்மலை சுப்ரமணிய ஸ்வாமி கோவிலில் திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலையில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சுப்ரமணிய ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த 2000ம் ஆண்டு செப்.,10ம் தேதி இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற ஆகம விதிப்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக உபயதாரர்கள் நிதி, கோவில் நிதி மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.ஐந்து நிலை கொண்ட புதிய ராஜகோபுரம் 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. ஐந்து லட்சம் ரூபாய் செலவில் வேலைப்பாடு மிகுந்த நிலைக்கதவு அமைந்துள்ளது.மேலும் 90 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுப்பிரகார மண்டபம், 20 லட்சம் ரூபாய் செலவில் பாவுதளம், மண்டப தூண்கள், சுற்றுப்பிரகார பகுதிகளில் சுதைகள், 13 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. மூலவர், பரிவார சன்னதிகள், கோவில் வளாகம் முழுவதும் 50 லட்சம் ரூபாய் செலவில் வர்ணம் பூசும் பணி என மூன்று கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. திருப்பணியை விரைந்து முடித்து, வரும் ஜூன் மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.