அன்னூர் : அன்னூர் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் நாளை (4ம் தேதி) நடக்கிறது. வைணவத்தை அழிவிலிருந்து காப்பாற்றி, உலகெங்கும் தழைக்கச் செய்தவர், தாழ்த்தப்பட்டோரை கோவில் பிரவேசம் செய்ய வைத்தவர் என, ஆன்மிக புரட்சி செய்தவர் ராமானுஜர். அவருடைய அவதார திருநாள் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று வருகிறது.அன்னுார் கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், நாளை (4ம் தேதி) ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் நடக்கிறது. அதிகாலை 5.30 மணியிலிருந்து ஆராதனை, ஹோமம், திருமஞ்சனம், அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடக்கிறது. காலை 7.30 மணிக்கு பெண்கள் பஜனையுடன் சுவாமி திருவீதியுலா முக்கிய வீதிகள் வழியாக நடக்கிறது. ஏற்பாடுகளை ஸ்ரீராமானுஜர் பக்த பேரவையினர் செய்து வருகின்றனர்.