பதிவு செய்த நாள்
09
மே
2014
02:05
பொள்ளாச்சி: மழை வந்ததையடுத்து, பொள்ளாச்சி அருகே கிராம மக்கள் விநாயகர் கோவில் கருவறை அடைக்கப்பட்ட முன் கதவை திறந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்டது செல்லாண்டிக்கவுண்டன்புதூர் கிராமம். இங்கு, 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரத்தடி விநாயகர் கோவில் பிரசித்தி பெற்றது. கடந்த 50 ஆண்டுக்கு முன் கோவில் கட்டப்பட்டது. மழையின்றி ஊர் வறட்சியில் வாடிய போது, விநாயகருக்கு நூதன முறையில் வழிபாடு செய்து மழை பொழிய செய்வது இப்பகுதி மக்கள் வழக்கம். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கடும் வறட்சியின் காரணமாக மழையின்றி பயிர்கள் வாடி வருகின்றன. இதனையடுத்து, அப்பகுதி மக்கள் கூட்டம் நடத்தி, விநாயகர் வழிபாடு நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி, கடந்த மாதம் 28ம் தேதி விநாயகர் கோவில் கருவறை முன், ஹாலோ பிளாக் கல் மூலமாக தொட்டி கட்டப்பட்டு, முன்பகுதி கதவு மூடப்பட்டது. பின், விநாயகர் சிலை தண்ணீரில், மூழ்க வைப்பதற்காக சிறு துளை அமைக்கப்பட்டது. அதன் வழியாக ஒவ்வொரு வீட்டிலிருந்தும் குடத்திலிருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீர் தொட்டிக்குள் கொட்டப்பட்டு, விநாயகர் சிலை தண்ணீரில் மூழ்க வைத்து வழிபாடு செய்தனர். வழிபாடு நடத்திய இரண்டு நாட்களுக்குள் மழை பெய்ய துவங்கியதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தொடர்ந்து, மழை பெய்து வருவதால், அப்பகுதி மக்கள் இறைவனுக்கு நன்றிக்கடன் செலுத்த திட்டமிட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன், விநாயகர் கோவில் கருவறை முன் மூடப்பட்ட கதவை திறந்தனர். பின், விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. பொதுமக்கள் வரிசையாக நின்று,‘ மழை தந்து பயிர்களை காத்த விநாயகப்பெருமானுக்கு எங்களது நன்றி; எங்க ஊரை எப்பவும் போல செழிப்பா வச்சுருக்கணும் சாமின்னு!, மனமுருகி வேண்டி வழிபாடு நடத்தினர். மழை வேண்டி விநாயகர் வழிபாடு செய்வது வழக்கம்; அதுபோல இப்பவும் செஞ்சோம்; பலன் கிடைச்சுடுச்சு; நிம்மதியாக இருக்கிறோம்; விநாயகப்பெருமானுக்கு நன்றி செலுத்தி விட்டோம்... மழை வந்த மகிழ்ச்சிய கொண்டாட பலருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது, என பொதுமக்கள் தெரிவித்தனர்.