வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் அணையை ஒட்டியுள்ள கிழவன் கோயிலில் வருஷாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. இக்கோயிலில் மூலவராக எழுந்தருளியுள்ள தர்மசாஸ்தா தூங்காலக் கிழவன் என்னும் பெயர் கொண்டு விளங்குகிறார். இப்பகுதியை காக்கும் காவல் தெய்வமாக வீற்றிருப்பதால் இப்பகுதி மக்கள் விழா எடுத்தும், பொங்கல், முடிகாணிக்கை என பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்துகின்றனர். இங்கு பிராமண சமுதாயத்தினரால் ஒவ்வொரு ஆண்டும் வருஷாபிஷேக விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு வருஷாபிஷேகம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலையில் சுவாமிக்கும், எதிரே குதிரை வாகனத்தில் அய்யனாராக எழுந்தருளியிருக்கும் சாஸ்தாவிற்கும், பரிவார தெய்வமாக வீற்றிருக்கும் கருப்பசாமி, சுடலைமாடசாமி உட்பட அனைவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் கணபதி ஹோமத்துடன் சிறப்பு புண்யாஜன பூஜைகள் நடத்தப்பட்டு பூஜிக்கப்பட்ட கும்பநீரால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. வைகுண்டராமன், சங்கரசுப்பிரமணியன், குமார், கிருஷ்ணன் உட்பட பக்தசபாவினர், பிராமண சமுதாய நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.