பதிவு செய்த நாள்
12
மே
2014
10:05
அழகர்கோவில்: மதுரையில், சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா, மே 10ல் துவங்கியது. முதல் இரண்டு நாட்களும், சுந்தரராஜ பெருமாள் பல்லக்கில் கோயிலை வலம் வந்தார். வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக, இன்று மாலை (மே12) கள்ளழகர் வேடத்தில், தங்கப் பல்லக்கில் மதுரை புறப்படுகிறார். ஆற்றில் இறங்குதல்: மே 14ல் தங்கக் குதிரை வாகனத்தில், காலை 6:30 மணிக்குள் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார். காலை 7:30 மணிக்கு அங்கிருந்து புறப்படும் அழகருக்கு, ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு, வண்டியூர் சென்றடைகிறார். மறுநாள், தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அன்று இரவு, ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது.
17 கி.மீ., நடைப்பயணம்: பக்தர்களை சந்தித்து ஆசி வழங்குவதற்காக, கள்ளழகர் 17 கி.மீ., நடைப் பயணம் மேற்கொள்கிறார். ஆற்றில் இறங்க வசதியாக, வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடம் உள்ளது. மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் சார்பில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.