பதிவு செய்த நாள்
12
மே
2014
10:05
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 11ம் நாளான நேற்று, பக்தர்கள் வெள்ளத்தில் தேரோட்டம் நடந்தது. மதுரை சித்திரைத் திருவிழா மே 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 8ல் அம்மனுக்கு பட்டாபிஷேகம், நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடந்தது; இரவு, மாசி வீதிகளில் சுவாமியும், அம்மனும் வலம் வந்து, நள்ளிரவு 12.30 மணிக்கு கோயிலுக்கு திரும்பினர். நேற்று தேரோட்டத்திற்காக, உச்சிக்கால பூஜை வரையுள்ள அனைத்து பூஜைகளும், அதிகாலை 3 மணிக்குள் முடிந்தன. அதிகாலை 4 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட திருத்தேர்களுக்கு ரதரோஹணம் பூஜை நடந்தது; தேர்களை புனிதப்படுத்த இப்பூஜை செய்யப்பட்டது. தேர்களை பாதுகாக்கும் தேரடி கருப்பு சுவாமிக்கு, அதிகாலை 5.30 மணிக்கு பூஜை நடந்தது. பின், சுவாமியையும், அம்மனையும் தேர்களில் எழுந்தருள செய்தனர். சக்கரங்களுக்கு பூசணிக்காய் பலி கொடுத்து, "ஹர ஹர சங்கரா... சிவ சிவ சங்கரா... மீனாட்சி சுந்தரா என பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே, சுவாமி தேர் காலை 6 மணிக்கு புறப்பட்டது; பத்து நிமிடங்களுக்கு பின், அம்மன் தேர் புறப்பட்டது. மாசி வீதிகளில் வலம் வந்து, அடுத்தடுத்து காலை 11 மணிக்கு நிலைக்கு வந்தன.
நகைகள் அணிவிப்பு: அம்மனுக்கும், சுவாமிக்கும் மன்னர் திருமலை நாயக்கர் செய்து கொடுத்த கற்கள் பதித்த நகைகளை, அனைத்து விழாக்களிலும் அணிவிப்பது வழக்கம்; தேரோட்டத்தின்போது மட்டும் அணிவிப்பதில்லை. தேர் ஆடி அசைந்து வரும்போது, அதிர்வு காரணமாக கற்கள் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக, பல ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதனால் மதியம் 3 மணிக்கு மேல், கோயிலில் இருந்து சகல மரியாதைகளுடன் கீரிடம் மற்றும் தங்க நகைகள் ஊர்வலமாக எடுத்து வந்து தேர்களில் வீற்றிருந்த சுவாமிக்கும், அம்மனுக்கும் அணிவிக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாக இருவரும் தனித்தனி வாகனங்களில் உலா வந்தனர். ஒரே நேரத்தில் பக்தர்கள் தங்களை தரிசிக்க வேண்டும் என்பதற்காக, நேற்றிரவு 7.30 மணிக்கு சப்தாவர்ணச் சப்பரத்தில் உலா வந்தனர். கோயிலுக்கு திரும்பிய பிறகு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று, பொற்றாமரைக் குளத்தில் தேவேந்திர பூஜையுடன், கோயிலில் 12 நாள் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.