பதிவு செய்த நாள்
13
மே
2014
11:05
அழகர்கோவில்: கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் வேல் கம்புடன், அழகர்மலையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார் கள்ளழகர். இன்று (மே 13) காலை 6 மணிக்கு மூன்று மாவடியில் எதிர்சேவையும்; நாளை காலை 7.45 மணிக்கு வைகை ஆற்றிலும் இறங்குகிறார். அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா மே10ல் துவங்கியது. முதல் 2 நாட்கள் பெருமாள், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். நேற்று, தோளுக்கினியாள் அலங்காரத்தில் புறப்பட்ட பெருமாள் கோயிலை வலம் வந்தார். கண்டாங்கி பட்டு உடுத்தி, தங்கப்பல்லக்கில் மாலை 5.35 மணிக்கு மதுரைக்கு கள்ளழகர் புறப்பட்டார்; பின், கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு கொம்பு சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. பின்,18ம்படி கருப்பண சுவாமியிடம் அனுமதி பெற்று மாலை 6.40 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டார். பக்தர்கள், கோவிந்தா என்ற முழக்கத்துடன் அழகரை வழி அனுப்பினர். இரவு முழுவதும் பயணிக்கும் கள்ளழகர், இன்று காலை 6 மணிக்கு மூன்றுமாவடி வருவார்; அங்கு எதிர் சேவை நடக்கும். காலை 8 மணிக்கு புதூரிலும், மாலை அவுட்போஸ்டிலும் எதிர்சேவை நடக்கிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் திருமஞ்சனம் நடக்கிறது. நாளை (மே 14) அதிகாலை 2 மணிக்கு, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த திருமாலையை ஏற்றுக்கொண்டு, வெட்டிவேர் சப்பரத்திலும்; 3 மணிக்கு தமுக்கம் எதிரில் ஆயிரம்பொன் சப்பரத்திலும் எழுந்தருளுகிறார்.
வைகை ஆற்றில்...: பின், தங்கக் குதிரை வாகனத்தில் புறப்படும் கள்ளழகர், காலை 6 மணிக்கு மேல் 6.30 க்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார். காலை 7.30 மணிக்கு, அங்கிருந்து புறப்படும் அவர் காலை 9 மணிக்கு ராமராயர் மண்டபம் செல்கிறார். பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சியும், அங்க பிரதட்சணம் செய்தும் நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கும். மாலை, அங்கிருந்து புறப்பட்டு, இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயில் செல்கிறார்.
வாண வேடிக்கை: அழகர் புறப்படும் போது மேள தாளம் மற்றும் குழாய்கள் மூலம் வெடிகள் வெடிக்கப்படும். இதில் பாதுகாப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு, வாண வேடிக்கை நடந்தது; ஒரு மணி நேரம் வரை கண்களை கவரும் வகையில் அமைந்தது. வைகை ஆற்றில் நாளை காலை கள்ளழகர் இறங்குவதையடுத்து. பாதுகாப்புப் பணியில் 5000 போலீசார் ஈடுபடுகின்றனர்.