பதிவு செய்த நாள்
13
மே
2014
02:05
ஸ்ரீவில்லிபுத்தூர்: மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் போது அணியும், ஆண்டாள் சூடிய மாலை, கிளி, வஸ்திரம் ஆகியவை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு சென்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி பெருமாளுக்கு, ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, தினமும் சார்த்தப்படுகிறது. இதே போல், திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் புரட்டாசி பிரம்மோற்ஸவ விழாவின் 5ம் நாளன்று, ஸ்ரீவி.,யிலிருந்து ஆண்டாள் சூடிக்களைந்த மாலை சாற்றுவது வழக்கம். ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாளுக்கு சித்திரை தேரோட்டத்தின் போதும், ஆண்டாள் சூடிக்களைந்த வஸ்திரம் சார்த்தபடும். ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, வஸ்திரம் சூடி, கள்ளழகர், மதுரை வைகை ஆற்றில் இறங்குவார். அந்த மாலை, கிளி, வஸ்திரம் ஆகியவை, ஆண்டாளுக்கு நேற்று சார்த்தப்பட்டு, பூஜைகள் நடந்தன. பின், ஸ்தானிகர் ரமேஷ் தலைமையில், மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டன. இவை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் கொண்டு செல்லப்பட்டு, திருமஞ்சனத்திற்குப் பின், சுந்தரராஜ பெருமாளுக்கு சார்த்தப்படும். பின், அழகர் ஆற்றில் இறங்குவார்.