பதிவு செய்த நாள்
15
மே
2014
11:05
ஆர்.கே.பேட்டை : அக்னி வசந்த உற்சவத்தில், நேற்று முன்தினம் அர்ச்சுனன், சுபத்திரை திருக்கல்யாணம் நடந்தது. இதில், சீர்வரிசை பொருட்களுடன், பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனூர், திரவுபதியம்மன் கோவில் அக்னி வசந்த உற்சவம், கடந்த வியாழன் அன்று பகாசூரன் கும்பத்துடன் துவங்கியது. தினமும், பாரத சொற்பொழிவு, தெருக்கூத்து நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை அர்ச்சுனன், சுபத்திரை திருக்கல்யாணம் நடந்தது. கோவில் மண்டபத்தில் வேதவிற்பன்னர்கள், யாகம் வளர்த்து, மந்திரங்கள் ஓத சுபத்திரை, அர்ச்சுனன் திருக்கல்யாணம் நடந்தது. இதில், பெண் வீட்டார் சார்பில் சீர்வரிசை பொருட்களுடன் பக்தர்கள் கலந்து கொண்டனர்.நாளை இரவு பூங்கரகம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கோவிலில் நிலை நிறுத்தப்படும். வரும் ஞாயிறு காலை துரியோதனன் படுகளமும், மாலையில் தீமிதி திருவிழாவும் நடைபெறும்.