வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு மந்தை மாரியம்மன் கோயிலில், 16 ம் ஆண்டு பூக்குழித் திருவிழா, சிறப்பாக நடந்தது. முதல்நாள் நிகழ்வாக கணபதி ஹோமமும், காப்புக்கட்டு வைபவமும் நடந்தது. விரதமிருக்கும் பக்தர்கள் கோயிலில் வழிபாடு செய்து காப்புக்கட்டிக் கொண்டனர். 2ம் நாள் கரகம் எடுக்கும் வைபவம் நடந்தது. பக்தர்கள் ஊர்வலமாக ஊர் எல்லையில் சென்று, அம்மனை கரகமாக எடுத்து, கோயிலுக்கு வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயில் மண்டபத்தில் வைக்கப்பட்டது. 3ம் நாள் நிகழ்வாக பக்தர்கள் தீ மிதிக்கும் பூக்குழித்திருவிழா நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பூவளர்த்தல் நடந்தது. மாலையில் விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் தாங்கள் நேர்த்திக்கடனுக்காக, குழந்தைகளை சுமந்தபடியும், அக்கினிச்சட்டி எடுத்தபடியும் தீமிதித்தனர்.