பதிவு செய்த நாள்
19
மே
2014
12:05
மீஞ்சூர் : மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில், தேர் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. வடகாஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூர் பெருந்தேவி தாயார் சமேத, வரதராஜ பெருமாள் கோவிலில், கடந்த, 12ம் தேதி, கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. அதற்கு பிறகு வந்த நாட்களில், சூர்யபிரபை, சந்திர பிரபை, கருடசேவை, நாகவாகனம், பெருமாள் திருக்கல்யாணம் உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடந்தன. தினமும் உற்சவ பெருமாள் மாடவீதிகளில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின், 7ம் நாளான நேற்று, ரத உற்சவம் நடந்தது. வண்ணமிகு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் உற்சவ பெருமாள் வீற்றிருக்க, பக்தர்களால், மாடவீதிகள் வழியாக வடம் பிடித்து இழுத்து செல்லப்பப்பட்டது.இதில், மீஞ்சூர், நந்தியம்பாக்கம், அனுப்பம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரளாக பங்கேற்று பெருமாளை வழிபட்டு சென்றனர்.