பதிவு செய்த நாள்
29
மே
2014
12:05
பாகூர்: அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்றதை முன்னிட்டு, பாகூர் மூலநாதர் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பாகூரில் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அக்னி நட்சத்திர தினத்தில் சுவாமியை குளர்விக்கும் வகையில், தாரா பாத்திரத்தில் (செப்பிலான சிறிய துளை உள்ள பாத்திரம்) நிரப்பப்பட்ட பன்னீர், ஏலக்காய் உள்ளிட்ட வாசனை திரவியங்களை, சிவலிங்கத்தின் மீது துளி துளியாக விழுமாறு செய்து அபிஷேகம் செய்வர். நேற்றுடன் அக்னி நட்சத்திரம் முடிந்தது. அதையொட்டி, நேற்று காலை 9.00 மணிக்கு, பால விநாயகர், மூலநாதர், வேதாம்பிகையம்மன், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகல் 12.00 மணிக்கு பன்னீர், பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் உள்ளிட்டவற்றால் மூலநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.