பதிவு செய்த நாள்
31
மே
2014
12:05
சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் கிடைத்துள்ள, கீழ்வாலை பாறை ஓவியங்கள், சிந்து சமவெளி பண்பாட்டை குறிப்பதாக உள்ளன. எனவே, தமிழகத்தில் கிடைத்துள்ள பாறை ஓவியங்கள் குறித்து, தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும், என, தொல்லியல் ஆய்வாளர், அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி கூறினார். தொல்லியல் துறை சார்பில், சென்னை எழும்பூர் தமிழ் வளர்ச்சி வளாகத்தில் நடந்த, மாதாந்திர கூட்டத்தில் அவர் பேசியதாவது: எழுத்து, மொழி தோன்றாத காலத்தில், பண்பாடு மற்றும் நிகழ்வுகளை, ஓவியங்கள் மூலமே, மனிதன் பதிவு செய்துள்ளான். மேலைநாடுகள் முதல் கொண்டு தமிழகம் வரை, இதுபோன்ற பண்டைய ஓவியங்கள் கிடைத்துள்ளன. இவற்றை, தான் வாழ்ந்த பகுதிகளில் உள்ள பாறைகளில் வரைந்துள்ளான். தமிழகத்தில், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி மலைத்தொடர், தேனி, மதுரை பகுதிகளில், 100 இடங்களில் பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. 1980க்குப் பின்னரே பாறை ஓவியங்கள், தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இவற்றில், கற்கருவி, அப்பகுதியில் வாழ்ந்த இனத்தைக் குறிக்கும் குறியீடு, பெண் மற்றும் ஆண் உருவங்கள் வரையப்பட்டுள்ளன. இவை தவிர, வேட்டையாடுதல், போர் செய்தல், விலங்குகளின் உருவங்களையும் வரைந்துள்ளனர். இந்த ஓவியங்கள், காவி நிறத்தில் உள்ளன. இந்த ஓவியங்களில், சில எழுத்து குறியீடுகளும் உள்ளன. இவை, சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துகளுடன் ஒத்தவையாக இருக்கின்றன. இந்த எழுத்துகளை சேர்த்துப் படிக்கும் போது, சூரிய ஒளி இருக்கும் போது, படகுகளில், ஆற்றைக் கடந்து வந்தவர்கள் என்ற பொருளைத் தருகின்றன. இந்த ஓவியங்கள், கி.மு., 2000 முதல் கி.பி., 2ம் நூற்றாண்டு வரையிலான காலத்தை ஒட்டியதாக இருக்கும். விழுப்புரம் மாவட்டம், கீழ்வாலை பகுதியில் கிடைத்ததை, கீழ்வாலை பாறை ஓவியங்கள் என, அழைக்கிறோம். இந்த ஓவியங்களை கண்டெடுத்தபோது, நான்கு பகுதிகளில், அவை இருந்தன. சில ஆண்டுகளில், இரு பகுதிகளில் இருந்த ஓவியங்களை, குவாரி உரிமையாளர்கள் கல்லாக வெட்டி எடுத்துவிட்டனர். இப்போது, இரு பகுதிகளில் மட்டுமே ஓவியங்கள் உள்ளன. பண்டைய கால பண்பாட்டை உணர்த்தும் இந்த ஓவியங்களை பாதுகாப்பது, தொல்லியல் மற்றும் அரசுத் துறைகளின் கடமை. இவ்வாறு, அவர் பேசினார்.