பதிவு செய்த நாள்
03
ஜூன்
2014
11:06
காஞ்சிபுரம்: குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவில், வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காஞ்சிபுரத்தில் உள்ள பழமை<யான கோவில்களில் குமரகோட்டம் முருகன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், 12 நாள் பிரம்மோற்சவம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு பிரம்மோற்சவம் நேற்று காலை 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து காலை 7:30 மணிக்கு வள்ளி – தெய்வானையுடன் சுவாமி திருவீதி உலா வந்தார். இரவு மேஷ வாகனத்தில் முருகர் திருவீதிவுலா சென்றார். வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில்: ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ளது வல்லக்கோட்டை. இக்கிராமத்தில், வள்ளி, தெய்வானை உடனான, சுப்பிரமணிய சுவாமி, 7 அடி உயரத்தில் நின்ற கோலத்தில், எழுந்தருளி உள்ளார். இக்கோவிலில், ஐந்தாம் ஆண்டு வைகாசி விசாக பிரம்மோற்சவம் நேற்று, காலை 6:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை ஒட்டி, சிறப்பு பூஜைகளும், ஆராதனையும் நடந்தன. ஏராளமான பக்தர்களுடன், வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசை வாத்தியங்களுடன், கொடியேற்றப்பட்டது. அதைதொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், வள்ளி, தெய்வானை உடனான சுப்பிரமணிய சுவாமி, விநாயகர், சண்டிகேஸ்வரர், அஸ்த்ராயர் ஆகியோர் எழுந்தருளி, வீதி உலா வந்தனர்.