பதிவு செய்த நாள்
03
ஜூன்
2014
12:06
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழா துவக்க நிகழ்ச்சியாக பந்தகால் முகூர்த்தம் நடந்தது. காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார். 63 நாயன்மார்களில் ஒருவர். புனிதவதியார் காரைக்காலில் பிறந்து பரமதத்தரை மணந்து வாழ்ந்து வந்தார். கணவர் கொடுத்து அனுப்பிய 2 மாங்கனியில் ஒன்றை சிவனடியார் வேடத்தில் வந்த இறைவனுக்கு உணவுடன் படைத்தார். பின் உணவு அருந்த வந்த கணவனுக்கு உணவில் மற்றொரு மாங்கனி ஒன்றை படைத்தார். மற்றொரு மாங்கனியை கணவர் கேட்க, புனிதவதியார் இறைவனை வேட்டி மாங்கனி பெற்று, அதை கணவருக்கு படைத்தார். முன்பு சாப்பிட்ட மாங்கனியை விட இந்த பழம் சுவைமிக்கதாக இருப்பதிற்கு காரணத்தை பரமத்தர் கேட்க, நடந்த சம்பவத்தை தெரிவித்தார் புனிதவதியார். அப்படி இறைவன் கொடுத்தார் என்றால், மீண்டும் ஒரு மாங்கனி ஒன்றை வர வழைக்கவேண்டும் என்றார் பரமதத்தர். புனிதவதியார் இறைவனை வேண்டி மறுபடியும் ஒரு மாங்கனியை பெற்றார்.
இதை கண்ட பரமதத்தர் நீ தெய்வ பிறவி என்று கூறி, புனிதவதியாரை பிரிந்து மறுமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். கணவருக்காக தாங்கிய உடலை வெறுத்து எலும்பாகி முதிய வடிவம் பெற்றார். பின் இறைவனை காண இமயம் சென்றார். இறைவன் உள்ள இடம் புனிதமானது என்பதால், அங்கு தன் கால் பாதம்பட கூடாது என்று தலைகீழாக கைகளால் நடந்து இறைவனை கண்டார். அப்போது, சிவபெருமான் புனிதவதியாரை அம்மையே என்று அழைத்தார் என்பது வரலாறு. இத்தகைய சிறப்புடைய காரைக்கால் அம்மையார் வரலாற்றை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறும் விதம் சோமநாதர் ஆலயத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது. இத்திருவிழாவில் மாப்பிள்ளை பார்த்தல், முகூர்த்தம், திருக்கல்யாணம், சிவபெருமான் சிவனடியார் வேடத்தில் ஊர்வலம், மாங்கனி வீசும் நிகழ்வு உள்ளிட்டவை நடத்தப்படும். மாங்கனி திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக பந்தகால் முகூர்த்தம் நேற்று முன்தினம் நடந்தது. பூஜைகள் செய்யப்பட்டு கோவிலுக்கு முன் பந்தகால் நடப்பட்டது. வரும் ஜூலை10ம் தேதி மாப்பிள்ளை அழைப்பு,11ம் தேதி திருக்கல்யாணமும், 12ம் தேதி மாங்கனி திருவிழா,13ம் தேதி பஞ்சமூர்த்திகளுடன் அம்மையார் இறைவனுக்கு காட்சி அளித்தால் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.