பதிவு செய்த நாள்
09
ஜூன்
2014
12:06
கடலூர்: கடலூர், புருகீஸ்பேட்டையில் செங்குந்த மரபினருக்கு சொந்தமான சுப்ரமணியசுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று ÷ காலாகலமாக நடந்தது. கடலூர், புருகீஸ்பேட்டையில் உள்ள செங்குந்த மரபினருக்கு சொந்தமான சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில் திருப்பணி செய்து முடிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி கடந்த 4ம் தேதி யாக சாலை பூஜைகள் துவங்கியது. தேவதா, அனுக்ஞை, மகா சங்கல்பம், கணபதி ஹோமம், தன பூஜை, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமம் நடந்தது. தொடர்ந்து அங்குரார்பணம், யாத்ராதானம், யாக சாலை பிரவேசம் நடந்தது. தொடர்ந்து தினசரி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை விஜாயகர் பூஜை, பரிவார பிரதான யாக சாலை பூஜைகள் நடந்து கடம் புறப்பாடாகி காலை 7:45 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், தொடர்ந்து 8 மணிக்கு மூலவருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சம்பத் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை 11 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.