பாடலாத்ரி நரசிம்மபெருமாள் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2014 12:06
செங்கல்பட்டு : சிங்கப்பெருமாள்கோவில், பாடலாத்ரி நரசிம்மபெருமாள் கோவிலில், தேரோட்டம் நேற்று, கோலாகலமாக நடந்தது. சிங்கப்பெருமாள்கோவிலில், புகழ்பெற்ற பாடலாத்ரி நரசிம்மபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, ஆண்டு பிரம்மோற்சவம், கடந்த 2ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏழாம் நாள் உற்சவமான நேற்று, தேரோட்டம் நடந்தது. முன்னதாக, காலை 6:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் நடந்தது. காலை 6:30 மணிக்கு சுவாமி, தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 7:45 மணிக்கு தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். மாட வீதிகள் வழியாக சென்று காலை 10:45 மணிக்கு, தேர் நிலையை அடைந்தது. சிங்கப்பெருமாள்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர்.