கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டையொட்டி நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. உற்சவர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு தேவாரம், திருவாசகம் பாடி, கோவில் பிரகாரத்தை வலம் வந்தனர். சின்னசேலம்: தென்பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வர் கோவிலில் மூலவருக்கு அண்ணாமலையார் அலங்காரமும், நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது. சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவில், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர் கோவில், கூகையூர் பெரிய நாயகி உடனுறை சொர்ணபுரீஸ்வரர் கோவில், அசலகுசலாம்பிகை சமேத பஞ்சாட்சர நாதர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.