பதிவு செய்த நாள்
19
ஜூன்
2014
10:06
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம், பத்மனாப சுவாமி கோவில் பாதுகாப்பு பெட்டக அறைகளில் உள்ள, பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, தங்கம், வைர ஆபரணங்கள் மற்றும் பொருட்களை, பொதுமக்கள் பார்வைக்கு, அருங்காட்சியகத்தில் வைக்க, கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், பல நூறு ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த நகைகளை, அனைவரும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. காங்கிரசை சேர்ந்த, முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான, கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில், பத்மனாப சுவாமி கோவில் என்ற விஷ்ணு கோவில் உள்ளது. திருவாங்கூர் அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, இந்த பிரமாண்ட கோவில் மூலஸ்தானத்தில், சுவாமி பத்மனாபர் சயனத்தில் இருக்கிறார்.மூலஸ்தானத்தை சுற்றிலும், கருங்கற்களால் ஆன, பாதுகாப்பு அறைகள் ஆறு உள்ளன. சில நூறு ஆண்டுகளாக, மூடியே கிடந்த அந்த அறைகளில், விலை மதிப்பு மிக்க தங்கம், வைர நகைகள் மற்றும் பொருட்கள் இருப்பதாக கூறப்பட்டது.சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, அந்த கோவில் பாதுகாப்பு அறைகளில் நான்கு, 2011ல் திறக்கப்பட்டது. அதில், இரண்டு அறைகளில், கோவில் திருவிழாக்களின் போது பயன்படுத்தப்படும் வெள்ளி, வெண்கல விளக்குகள், குடங்கள் போன்ற பொருட்கள் இருந்தன.
பிற மூன்று அறைகளை திறந்து பார்த்த போது, அவற்றினுள், ஆயிரக்கணக்கான தங்கம், வெள்ளி, வைரம், வைடூரிய நகைகளும், தங்க குடங்கள், தங்க தாம்பாளங்கள், தங்க பானை போன்ற பொருட்களும் இருந்தன.ஆறு பாதுகாப்பு அறைகளில், ’பி’ என, குறிப்பிடப்பட்டுள்ள அறை மட்டும், இன்னும் திறக்கப்படவில்லை. அதை திறந்தால், கோவிலுக்கு ஆபத்து என்ற கருத்து நிலவுவதால், அந்த அறை திறக்கப்படவில்லை.திறக்கப்பட்ட அறைகளில் உள்ள நகைகள், பொருட்கள் பட்டியலிடப்பட்டு வருகின்றன. இதற்காக, வல்லுனர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. முதற்கட்ட தகவலின் படி, அந்த கோவிலில், பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் நகைகள், பொருட்கள் இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், கேரள சட்டசபையில், முதல்வர் உம்மன் சாண்டி, நேற்று கூறுகையில், ”பத்மனாப சுவாமி கோவில் பாதுகாப்பு அறைகளில், கணக்கிடப்பட்டு வரும் நகைகள் மற்றும் பொருட்கள், அருங்காட்சியம் ஒன்றை ஏற்படுத்தி, அதில் பொதுமக்கள் பார்க்க வசதியாக வைக்கப்படும்,” என்றார். இதனால், அந்த கோவிலின் பாரம்பரிய நகைகள் மற்றும் பொருட்களை, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட, வாய்ப்பு கிடைத்துள்ளது.
கடந்து வந்த பாதை:
*2011: கேரள முதல்வராக இருந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அச்சுதானந்தன், கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பிலிருந்து, அரச குடும்பத்தினர் விலக்கப்பட வேண்டும் என்றார். அப்போது, ’மன்னர் மார்த்தாண்ட வர்மா, பாயசம் என்ற பெயரில், கோவில் நகைகளை வீட்டுக்கு எடுத்துச் சென்றார்’ என்றார்.
*2011 நவம்பர்: கோவில் பாதுகாப்பு அறைகளை திறந்து, பொருட்களை கணக்கிட, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
*உலக தரத்திலான முறைகளில், பொருட்கள், நகைகள் கணக்கிட பணிகள் துவக்கம்.
*2014 ஏப்ரல்: கோவில் நிர்வாகத்தில் முறை கேடுகள் நடந்ததாக, சுப்ரீம் கோர்ட்டில் தகவல்.
*கோவில் சொத்துகளை தணிக்கை செய்ய, முன்னாள் சி.ஏ.ஜி., வினோத் ராய் நியமனம்.
அதிகாரிகள் நியமனம்: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ஆர்.எம்.லோடா, ஏ.கே.பட்நாயக் ஆகியோர், கடந்த ஏப்ரலில் பிறப்பித்த உத்தரவுப்படி, கோவில் சொத்துகளை தணிக்கை செய்ய, முன்னாள் கணக்கு தணிக்கை அதிகாரி (சி.ஏ.ஜி.,) வினோத் ராய் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி சுரங்க முறைகேடு போன்ற ஊழல்களை அம்பலப்படுத்தியவர்.மேலும், திருவாங்கூர் அரச குடும்பத்தினரிடம் இருந்த கோவில் நிர்வாகம் மாற்றப்பட்டது. ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட, நிர்வாக குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்தக் குழுவில், திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி, கோவில் தந்திரி, கோவில் தலைமை பாதுகாவலர், மாநில அரசு பரிந்துரைக்கும் இரு நபர்கள் இடம் பெற்றுள்ளனர்.கூடுதலாக, கோவிலின் செயல் அதிகாரியாக, மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரியும் குருவாயூர் கோவில் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமாக இருந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவில் பொக்கிஷங்கள், திருவாங்கூர் அரச குடும்பத்தினரால் திருடப்பட்டதாக, இந்த வழக்கை விசாரித்து வரும், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளோ அல்லது வழக்கில் தொடர்புடையவர்களோ, அரசுக்கு தெரிவிக்கவில்லை. இந்த வழக்கு, ஆகஸ்ட் 6ல், சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது, மாநில அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்கும். உம்மன் சாண்டி,கேரள முதல்வர், காங்., கோவில் பொக்கிஷங்கள், கோவிலை பராமரித்த திருவாங்கூர் அரச குடும்பத்தினரால், அவ்வப்போது திருடப்பட்டதாக கூறப்படுவது குறித்து, சுப்ரீம் கோர்ட் அனுமதியின் படி, விசாரணை நடத்தப்படும். திருப்பதி, குருவாயூர் கோவில்கள் நிர்வகிப்பது போல, பத்மனாப சுவாமி கோவிலை நிர்வகிக்கவும், தனி தேவஸ்தான அமைப்பு ஏற்பாடு செய்யப்படும்.
வி.எஸ்.சிவகுமார்,தேவஸ்தான அமைச்சர், காங்., பொக்கிஷங்கள் அனைத்தும் மக்களின் சொத்து. இதை முறைகேடாக பயன்படுத்தக் கூடாது. இந்த விவகாரத்தில், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டும் குறிப்புகளை, ஆலோசனைகளை, கேரள அரசு பின்பற்ற வேண்டும். பொக்கிஷங்களை வங்கியில் ஒப்படைத்தால், அதில் இருந்து கிடைக்கும் வட்டியை, கோவில் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம்.
ராதாகிருஷ்ணன்,மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.,
ஜோதிடர்கள் எச்சரிக்கை: கோவிலின் பாதுகாப்பு அறைகளில், ’பி’ அறை இன்னும் திறக்கப்படவில்லை. ’அதை திறந்தால், கோவிலுக்கு பாதிப்பு ஏற்படும்’ என, ’தேவபிரஸ்னம்’ எனப்படும், ஆண்டவனின் உத்தரவை கேட்டதாக கூறும் ஜோதிடர்கள் தெரிவித்தனர். அந்த அறை, மூலஸ்தானத்தின் கீழ் பகுதியில் அமைந்து உள்ளது. அதில் தான், கணக்கிட முடியாத பொக்கிஷங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.அது போல், அங்கிருந்த பொக்கிஷங்களை, கோவிலை நிர்வகித்தவர்கள் எடுத்துச் சென்று விட்டதால் தான், அதை திறக்கக் கூடாது என, வலியுறுத்தப்படுகிறது என்ற கருத்தும் உள்ளது.