பதிவு செய்த நாள்
19
ஜூன்
2014
11:06
தேவகோட்டை: கண்டதேவி குங்குமகாளியம்மன் கோயில் திருவிழா, கொடியேற்றதுடன் துவங்கியது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் உள்ள சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில், குங்கும காளியம்மன் கோயில்களின் கும்பாபிஷேகம் கடந்த 2012 ல் நடந்தது. அதன்பிறகு குங்கும காளியம்மன் கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டு, ஆனித் திருவிழா தேரோட்டம் நடந்தது. அந்தாண்டு சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேர் பழுதானதால், காப்பு கட்டாமலேயே திருவிழா நின்று போனது. அதன்பிறகு 2013 ல் குங்கும காளியம்மன் கோயில் திருவிழாவும் நடக்கவில்லை. இந்நிலையில், கண்டதேவியைச் சேர்ந்த சொர்ணலிங்கம் தொடர்ந்த வழக்கில், தேரோட்டம் இல்லாமல் திருவிழா நடத்த, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இதை தொடர்ந்து வழக்கமாக கிராமத்தினரே நடத்தும் குங்கும காளியம்மன் கோயில் திருவிழா நேற்று துவங்கியது. நேற்று இரவு 7:00 மணியளவில் வாஸ்து சாந்தி பூஜை செய்யப்பட்டது. இரவு 8:15 க்கு கொடியேற்றம் மற்றும் காப்புகட்டுதல் நடந்தது. நிகழ்ச்சியில், சிவகங்கை சமஸ்தான மேலாளர் இளங்கோவன், தாசில்தார் கயல்விழி, ஊராட்சி தலைவர் முருகன், ரோட்டரி சொர்ணலிங்கம், சிறுமருதூர் சுப்பையா உட்பட கிராமத்தினர் பங்கேற்றனர். தேரோட்டம் ஜூன் 26 ல் நடக்கிறது.
போலீஸ் குவிப்பு: கண்டதேவி சொரண்மூர்த்தீஸ்வரர் கோயிலில், தேரோட்டம் இல்லாமலும், யாருக்கும் முதல் மரியாதை தராமலும் திருவிழா நடத்தும்படி, மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதையொட்டி, கண்டதேவியில் நூற்றுக்கணக்கான போலீசார், பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.