(ஜூன் 21-ம் தேதி பிற்பகல் 11.12 மணிக்கு ராகு பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும், கேது பகவான் மேஷ ராசியிலிருந்து மீனம் ராசிக்கும் இடம் பெயருக்கின்றனர்.)
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட அமுதத்தை, தேவர்கள் ஒரு பக்கமும் அசுரர்கள் ஒரு பக்கமுமாக அமர்ந்திருக்க, மகாவிஷ்ணு மோகினி வடிவில் வந்து பங்கிட்டார். முதலில் தேவர்களுக்கு அமுதம் கொடுக்கப்பட்டது. அசுரர்கள் பலரும் மோகினியிடம் மயங்கி இருந்தாலும் அவர்களில் பிரம்மாவின் பேரனான காஸ்யபர் வம்சத்தில் வந்த சுவர்பானு என்ற அசுரன் ஒருவனுக்கு மட்டும் அமுதம் தமக்கு கிடைக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. எனவே சுவர்பானு தேவர் வடிவம் கொண்டு சந்திரனுக்கும் சூரியனுக்கும் நடுவில் வந்து அமர்ந்தான். தேவர்களுக்கு அமுதம் வழங்கியபோது அவனும் அமுதம் பெற்று உண்டுவிட்டான். அதை கவனித்த சூரியனும் சந்திரனும் இவன் அசுரன் என மோகினியிடம் சாடை காட்டினர். கோபம் கொண்ட திருமால் (மோகினி) தன் கையிலிருந்த அகப்பையால் சுவர்பானுவின் தலையில் அடித்தார். அதனால், சுவர்பானுவின் தலை தனியாகவும் உடல் தனியாகவும் விழுந்தது. அமுதம் உண்டதால் அவன் இறக்கவில்லை.
இரு உடலாக உடல் இருந்தும் தலை இல்லாமலும் தலை இருந்தும் உடல் இல்லாமலும் இருந்த சுவர்பானு விஷ்ணுவிடம் தன் தவறுக்கு வருந்தி அருள் செய்ய வேண்டினான். விஷ்ணு பகவான் அருள் சுரந்து பாம்பு உடலை கொடுத்து தலையுடன் பொருத்தினார். அதேபோல் பாம்புத்தலையை மனித உடலுடன் பொருத்தினார். மனித தலையும் பாம்பு உடலும் உள்ளவன் ராகு எனவும், பாம்பு தலையும் மனித உடலும் உள்ளவன் கேது எனவும் அழைக்கப்பட்டனர். இருவருக்கும் உயிர் ஒன்றுதான். இருவரும் நேர் எதிர்திசையில் நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிக்கும் படி கூறி அருள்பாலித்தார். இவ்வாறு ராகு கேது உருவானதாக வரலாறு கூறுகிறது.
வழிபாட்டு பாடல்!
ராகு!
பனியென உருவமாகி பட்சமாய் அமுது உண்டு தணியென உயிர்கட்கெல்லாம் தகும்படி யோகம் போகம் துணிவுடன் அளித்து நாளும் துலங்கிட இன்பம் நல்கும் மணமுறும் இராகு பொற்றாள் மலரடி சென்னி வைப்பாம்.