பதிவு செய்த நாள்
17
ஜூலை
2014
10:07
பெரியகுளம் : பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் கடைசி திருவிழாவான நேற்று, அதிகாலை முதல், இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேனி மாவட்டத்தில் வீரபாண்டி மாரியம்மன் திருவிழாவிற்கு அடுத்தபடியாக, பெரியகுளம் கவுமாரியம்மன் திருவிழா பிரசித்தி பெற்றது. கவுமாரியம்மனை வணங்கினால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஜூலை 7ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் அம்மன் குதிரை, யானை, சிம்மம், பூப்பல்லக்கு, அன்னபட்ஷி, ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று கடைசிநாள் திருவிழாவில், அதிகாலை முதல் இரவு வரை உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள், ஆயிரக்கணக்கானோர் தீச்சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். அம்மன் சிம்ம அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் ராஜா மற்றும் மண்டக்கப்படிதாரர்கள் செய்திருந்தனர்.