பதிவு செய்த நாள்
18
ஜூலை
2014
10:07
ராமேஸ்வரம்:ராமாயண வரலாற்றில் தொடர்புடைய, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், 12ம் நுாற்றாண்டில் உருவானது. இக்கோயிலில், கடந்த 5.2.2001ல் நான்காவது கும்பாபிஷேகம் நடந்தது. ஐந்தாவது கும்பாபிஷேகம் 2015ல் நடைபெற உள்ளது. இதற்காக 2 கோடி ரூபாய் செலவில் கோயில் மூன்றாம் பிரகாரம், சேதுபதி மண்டபம், அனுப்பு மண்டபத்தில் உள்ள சிலைகள், ஓவியங்களை சீரமைத்து, உப்புக்காற்றில் சேதமடையாமல் இருக்க, ’எமல்சன் பெயின்ட்’ பூசப்பட்டது. மேலும் 9 நிலைகளுடன் 126 அடி உயரம் கொண்ட கிழக்கு ராஜகோபுரத்தில், ரூ.27 லட்சத்தில் சிற்பங்கள் சீரமைத்து, இதர பழுதுகள் சரி செய்யப்பட உள்ளது. இந்த கோபுரத்தில் வர்ணம் பூச்சு துவக்க, நேற்று சாரம் அமைக்கும் பணி முடிந்தது.ராமேஸ்வரம் கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் கூறியதாவது:தற்போது ராஜகோபுரத்தில் உள்ள ஐவரி கலர் ஸ்னோசெம், மழையால் பாசி படிந்து, பொலிவு இழந்துள்ளது. உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி ’சில்வர் கிரே’ வர்ணத்தில், எமல்சன் பெயின்ட் பூசப்பட உள்ளது. இந்த வர்ணம் தான், தற்போது திருவண்ணாமலை, திருச்செந்துார், திருவல்லிக்கேணி கோயில் கோபுரங்களில் பூசப்பட்டுள்ளது, என்றார்.