பதிவு செய்த நாள்
19
ஜூலை
2014
11:07
திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளி கோயிலில், சரக்கு பாட்டில்களில், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பன்னீரை அடைத்து விற்பதால், பக்தர்கள் வேதனைப்படுகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் பத்ர காளியம்மன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் கோயிலுக்கு வெளியே உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் எலுமிச்சை மாலை, பூஜை தட்டுகளை வாங்கிச் சென்று அம்மனுக்கு அர்ச்சனை செய்து, வழிபடுகின்றனர். பூஜை தட்டில் தேங்காய் ஒன்று, பழம் இரண்டு, சூடம் பாக்கெட், விபூதி, குங்கும பாக்கெட், ஊதுபத்தி பாக்கெட் ஆகியவற்றுடன் தலா ஒரு பன்னீர் பாட்டிலும் இருக்கும். இதில், பன்னீர் பாட்டில்களை உள்ளூரிலேயே தயாரித்து, குவார்ட்டர் பாட்டில்களில் அடைத்து, கோயில் பூஜை தட்டுகளில் வைத்து விற்கிறார்கள். பூஜைக்கான புனித பொருட்களுடன் போதை பாட்டில்களை பார்க்கும் பக்தர்கள் மனம் வருந்தினாலும், வேறு வழியின்றி வாங்கி செல்கின்றனர். கோயில்களில் குவார்ட்டர் பாட்டில்களில் உள்ள பன்னீரை, பூஜைக்கு பயன்படுத்தாமல், கீழே ஊற்றி விடுகின்றனர். திருப்புவனத்தை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளில் வீசி எறியப்படும் பாட்டில்களை எடுத்து வந்து, சுத்தம் செய்யாமல் பன்னீரை அடைத்து விற்பதால், பாட்டில்களை திறந்த உடன் சரக்கு வாசனை தான் வருகிறதே தவிர, பன்னீர் வாசனை வருவதில்லை. அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பக்தர்களின் வேதனை.
கோயில் செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி கூறுகையில், நேற்றே கடைகளில் போதை பாட்டிலில் அடைக்கப்பட்ட பன்னீரை விற்பனை செய்ய கூடாது என சொல்லி விட்டேன், என்றார். சரக்கு பாட்டிலில் பன்னீர் இருப்பதால், காளிக்கு அபிஷேகம் செய்யாமல் பூஜாரிகள் பாட்டிலை கோயில் வளாகத்தில் குவித்து வைத்திருந்தனர்.