பதிவு செய்த நாள்
19
ஜூலை
2014
02:07
காளையார்கோயில்:ஆடி வெள்ளியான நேற்று சிவகங்கை மாவட்ட அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.கொல்லங்குடி அருகேயுள்ள அரியாக்குரிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோயிலுக்கு ஆடி வெள்ளியான நேற்று காலை ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்திருந்தனர். காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.காத்திருப்பு: அர்ச்சனை டிக்கெட்டுடன் பூஜைக்கு வேண்டிய மாலை,தேங்காய்,பழம்,பூக்களுடன் ஏராளமான பக்தர்கள் அம்மன் சன்னதி முன்பு தரிசனத்திற்காக நின்றனர். சிறப்பு பூஜை துவங்கிய போது அருகில் நின்ற ஒரு சில பக்தர்களிடம் மட்டும் பூஜைக்குரிய பொருட்களை அங்கிருந்த பூசாரிகள் வாங்கினர். அபிஷேக நேரத்தில் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில்,சன்னதி அருகில் அமர மண்டகபடிதாரருக்கு மட்டுமே சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.மண்டகபடிதாரர்கள் என்ற பெயரில் சன்னதி முன்பு கூடியிருந்த கூட்டத்தினருடன், ஏராளமான பூசாரிகளும் சேர்ந்து அபிஷேக,தீபாராதனையின் போது அம்மனை மறைத்து நின்றதால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் மிகவும் வேதனை அடைந்தனர்.பக்தர்கள் தள்ளுமுள்ளு: அம்மன் தரிசனத்திற்காக பக்தர்கள் வரிசையில் வர கம்பியால் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தாலும், தரிசனம் முடிந்து வெளியேறும் பகுதி வழியாகவும், பக்தர்கள் நுழைந்ததால் அம்மனை தரிசிக்க முடியாமல் வரிசையில் நின்ற பக்தர்களுடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது.இவர்களை ஒழுங்குபடுத்த ஊழியர்கள் யாரும் இல்லாததால் குழப்பமே மிஞ்சியது.தட்சணையே குறி: அர்ச்சனை தட்டுடன் வரும் பக்தர்களும்,இதர பக்தர்களும் ஒரே இடத்தில் தரிசனத்திற்காக நிற்கும் நிலை தான் உள்ளது. அர்ச்சனை தட்டுடன் வரும் பக்தர்களிடம் அங்கிருக்கும் பத்துக்கும் மேற்பட்ட பூசாரிகள் "கோரிக்கை எதுவும் உள்ளதா "தட்சணை வையுங்கள் என கேட்டு பணம் வசூல் செய்வதில் குறியாக இருப்பதால் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாத நிலை தான் நீடித்தது. பல்வேறு இடங்களில் இருந்து கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதி கருதி சுவாமி தரிசனத்திற்கு வேண்டிய வசதிகளை கோயில் நிர்வாகம் எடுக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.செயல் அலுவலர் இளையராஜா கூறுகையில்,"நிர்வாகம் சார்பாக வெளியூரில் உள்ளேன். வரும் காலங்களில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு,தரிசனத்திற்கு பக்தர்களிடம் வசூல் செய்யும் பூசாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.