பதிவு செய்த நாள்
21
ஜூலை
2014
11:07
திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த ஆடிப்பரணி விழாவில், 60 ஆயிரம் பேர் காவடிகள் எடுத்தனர். மொத்தத்தில் பரணி விழாவில், 1 லட்சம் பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். ஆறு மணி நேரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர்.இன்று ஆடிக்கிருத்திகை : திருத்தணி முருகன் கோவிலில், இன்று ஆடிக்கிருத்திகை விழா மற்றும் முதல் நாள் தெப்பம் நடக்கிறது. நேற்று ஆடிப்பரணி என்பதால், தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி உட்பட, அண்டை மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் திருத்தணிக்கு வந்தனர். பின், மலையடிவாரத்தில் உள்ள சரவணபொய்கை மற்றும் மேல்திருத்தணியில் உள்ள நல்லாங்குளம் ஆகிய இடங்களில், பக்தர்கள் புனித நீராடி, மலர், மயில், பால் மற்றும் பன்னீர் காவடிகளுடன், மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை தரிசித்தனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, மொட்டை அடித்தும் காவடிகள் எடுத்தும், முருகப்பெருமானை தரிசித்தனர்.நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று மாலை வரை, 60 ஆயிரம் பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து தரிசித்தனர். நேற்று மட்டும், 1 லட்சம் பக்தர்கள் மூலவரை தரிசித்தனர்.மலைக்கோவிலில் அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில், பக்தர்கள் ஆறு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை வழிபட்டனர். சில பக்தர்கள் காவடிகளுடன் பம்பை, உடுக்கை மற்றும் சிலம்பாட்டத்துடன் வந்து வழிபட்டனர். விழாவை ஒட்டி, அதிகாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.காவடி மண்டபத்தில் உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.புதிய ரக மலர்கள் : மாலை 6:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் மலைப்படிகள் வழியாக, சரவணபொய்கைக்கு வந்து, குளத்தை ஒருமுறை வலம் வந்து, மீண்டும் மலைக்கோவிலுக்கு சென்றடைந்தனர்.ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு, மலைக்கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் உட்புறத்தில், பெங்களூரில் இருந்து வரவழைக்கப்பட்ட புதிய ரக மலர்களால், அனைத்து சன்னிதிகளில், அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.மாவட்ட எஸ்.பி., சரவணன் தலைமையில், 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.200 பஸ்கள் இயக்கம் : ஆடி கிருத்திகைக்காக, திருத்தணிக்கு, 200 பஸ்களை, விழுப்புரம் போக்குவரத்து கழகத்தினர் இயக்குகின்றனர். திருத்தணி முருகன் கோவிலில், ஆடி கிருத்திகை, இன்று (21ம் தேதி) விமரிசையாக கொண்டாடப்படுகிறது. முருகனை தரிசிப்பது, காவடி எடுத்துச் செல்வது என, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், திருத்தணிக்கு செல்வர். அவர்களின் வசதிக்காக, விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில், 200 பஸ்கள் இயக்கப்படுகின்றன.இதுகுறித்து, விழுப்புரம் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆடி கிருத்திகைக்காக, சென்னை, வேலுார், ஆரணி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சிறப்பு பஸ்களை இயக்குகிறோம்.வழக்கமாக இயக்கப்படும், 89 பஸ்களுடன், கூடுதலாக, 111 சிறப்பு பஸ்கள் என, மொத்தம், 200 பஸ்கள் இயக்கத் திட்டமிட்டு உள்ளோம். சனிக்கிழமை (19ம் தேதி) முதல், தேவையின் அடிப்படையில், சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறோம்.திருத்தணிக்கு செல்லும் பக்தர்கள், திரும்புவதற்கு வசதியாக, 22ம் தேதி வரை, சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.பெண்களுக்கு சேப்டி பின் : முருகன் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள், தங்களது நகைகளை பாதுகாக்கும் வகையில், திருத்தணி காவல் நிலையம் சார்பில், மலைக்கோவில் வளாகத்தில் சேப்டி பின் (கம்பி ஊக்கு) வழங்கப்பட்டது. நேற்று முன்தினம், 10 ஆயிரம் சேப்டி பின்னும், நேற்று, 30 ஆயிரம் சேப்டி பின்னும் வழங்கப்பட்டன. இன்று, 50 ஆயிரம் சேப்டி பின்கள் வழங்கப்பட உள்ளன.