பதிவு செய்த நாள்
21
ஜூலை
2014
12:07
திருப்பதி:திருமலை ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வசூலாக, 3.12 கோடி ரூபாய் கிடைத்தது.திருமலை ஏழுமலையானை தரிசிக்க, வார இறுதி நாட்களில், பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது. கடந்த இரு மாதங்களாக, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், கூட்டம் அலை மோதுகிறது.திருமலை ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களின் வருகை உயரும் போது, உண்டியல் வருமானமும் உயரும்.அதனால், வெள்ளிக்கிழமை மாலை முதல், சனிக்கிழமை மாலை வரை, ஏழுமலையான் உண்டியலில், பக்தர்கள் சமர்ப்பித்த காணிக்கையை எண்ணும் பணி நடந்தது. இதில், 3.12 கோடி ரூபாய் வசூலானதாக, பரக்காமணி (உண்டியல் காணிக்கை கணக்கிடும் பிரிவு) அதிகாரிகள் தெரிவித்தனர். இது இந்த ஆண்டின், இரண்டாவது பெரிய வருமானம்.திருமலையில் சனிக்கிழமை, பக்தர்கள் வருகை அதிகம் இருந்ததால் தரிசனத்திற்காக, பல மணிநேரம் காத்திருந்தனர். 300 ரூபாய் விரைவு தரிசனம் வாயிலாக, 15 ஆயிரம் பக்தர்கள் தரிசித்ததால், மதியம், 2:00 மணிக்கே, விரைவு தரிசன டிக்கெட் விற்பனை ரத்து செய்யப் பட்டது.அதனால், பக்தர்கள் அந்த வரிசையில் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், தங்களை அந்த தரிசன வரிசையில் அனுமதிக்க கோரி, பக்தர்கள் பலர் நேற்று முன்தினம் இரவு, போராட்டம் நடத்தினர். பின், தேவஸ்தான அதிகாரிகள் வந்து, அவர்களை சமாதானம் செய்தனர்.