பதிவு செய்த நாள்
22
ஜூலை
2014
02:07
திருவையாறு: திருவையாறு ஐயாறப்பர் கோவிலில், ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, நேற்று காலை, 7 மணிக்கு, கொடியேற்றம் நடந்தது.விழாவில், தருமபுர ஆதீனம் கட்டளை விசாரணை முனைவர் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள், திருவையாறு நீதிபதி சோமசுந்தரம், கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, தினமும், ஸ்வாமி புறப்பாடு நடக்கவுள்ளது. வரும், 26ம் தேதி, ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பட்டு, புஷ்பமண்டப காவிரி ஆற்று படித்துறையில், தீர்த்தவாரி நடக்கிறது. அன்றிரவு, கோவில் தென்கயிலாயத்தில், அப்பர் சுவாமி கயிலைக்காட்சி நடக்கிறது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, அப்பர் பெருமானை தரிசித்துச் செல்வர். வரும், 29ம் தேதி ஆடிப்பூர தேரோட்டம் நடக்கிறது. மறுநாள், (30ம் தேதி) கொடி இறக்கம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, தருமபுர ஆதீனம் கட்டளை விசாரணை முனைவர் குமாரசுவாமி தம்பிரான் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். விழாவை முன்னிட்டு, தினந்தோறும் அம்மன் கோவில் கொலு மண்டபத்தில், சொற்பொழிவும், இசை நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது.