பதிவு செய்த நாள்
23
ஜூலை
2014
11:07
கம்மாபுரம்: கம்மாபுரம் அருகே கோவில் திருவிழாவில், ஏராளமான ஆண்கள் வேண்டுதலின்பேரில் ’திம்பிச் சுற்றி’ ( கை கோர்த்தபடி சுற்றுதல்) நேர்த்திக் கடன் செலுத்தினர். கடலூர், கம்மாபுரம் அடுத்த சி.கீரனூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 30ம் தேதி துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா, அரிச்சந்திரா நாடகம் நடந்தன. நேற்று முன்தினம் 21ம் தேதி காலை 7:30 மணிக்கு அரவாண் களபலி நிகழ்ச்சி, மாலை 2:30 மணிக்கு 108 பால்குட அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம், மாலை 5:30 மணிக்கு நடந்த தீமிதி உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தும், சாட்டை அடி வாங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் கல்வி, செல்வம், குலம் விருத்தியாக வேண்டி, ஏராளமான ஆண்கள் புது துணி உடுத்தியும் கையில் காப்புக்கட்டிக்கொண்டும், ’திம்பிச் சுற்றி’ (கை கோர்த்தபடி சுற்றுதல்) அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த வினோத நிகழ்ச்சியை வெளியூர் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.