பதிவு செய்த நாள்
25
ஜூலை
2014
12:07
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் நடந்த, பிரதோஷ பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆத்தூர் அடுத்த, தென்பொன்பரப்பி கிராமத்தில், 1,200 ஆண்டு பழமை வாய்ந்த சொர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஒவ்வொரு பிரதோஷ நாளில், 5.5 அடி உயரம் கொண்டதும், நவபாஷன காந்த கல்லால் பிரதிஷ்டை செய்துள்ளதுமான லிங்கம் மற்றும் இளம் நந்தி சிலைக்கு, சிறப்பு பூஜை நடந்து வருகிறது. நேற்று, பிரதோஷ நாளையொட்டி, சொர்ணபுரீஸ்வரர் மற்றும் நந்தி சிலைக்கு, பால், பழம், மஞ்சள், தயிர், நெய், இளநீர், தேன் உள்பட, 16 வகையான அபிஷேக பூஜைகள் செய்தனர். பின், சொர்ணபுரீஸ்வரர் மற்றும் நந்தி பகவான், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆத்தூர், தலைவாசல், வீரகனூர், கெங்கவல்லி, சின்னசேலம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அதேபோல், ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், தலைவாசல் கைலாசநாதர், வீரகனூர் கங்கா சவுந்தரேஸ்வரர், ஏத்தாப்பூர் சாம்பவமூர்த்தீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடந்தது.