பதிவு செய்த நாள்
25
ஜூலை
2014
12:07
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல்கள், நேற்று திறந்து, பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 40.98 லட்சம் ரொக்கம் மற்றும், 98 கிராம் தங்கம், 474 கிராம் வெள்ளி பொருட்களை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர். தரிசனதுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த, கோவிலில், 46 இடங்களில் உண்டியல் வைத்துள்ளனர். மாதந்தோறும் இறுதி வாரத்தில், கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்படும். நேற்று காலை, ஸ்ரீரங்கம் கோவில் ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் ஜெயராமன் முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டது.அறுபதுக்கும் மேற்பட்ட பக்தர்கள், கோவில் அலுவலர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மாலையில் கணக்கிடப்பட்டதில், 40 லட்சத்து, 98 ஆயிரத்து, 814 ரூபாய் ரொக்கம், 98 கிராம் தங்கம், 474 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்ஸிகள் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.