பதிவு செய்த நாள்
26
ஜூலை
2014
11:07
தியாகதுருகம்: சாத்தனூர் மகா மாரியம்மன், திரவுபதியம்மன் கோவில் திருவிழா 100 ஆண்டுகளுக்கு பின் நேற்று நடந்தது. தியாகதுருகம் அடுத்த சாத்தனூர் கிராமத்தில் பழமைவாய்ந்த மகாமாரியம்மன், திரவுபதியம்மன் கோவில் திருவிழாவை 100 ஆண்டுகளுக்கு பின் இவ்வாண்டு நடந்தது. இதற்காக 5 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டது. கடந்த 18ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. கோவில் வளாகத்தில் மகாபாரத சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து 21 ம் தேதி அரவாண் களபலி நிகழ்ச்சி நடந்தது.நேற்று தேர் திருவிழாவை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்டு தேரில் வைத்து மகாதீபாராதனை செய்யப்பட்டது. மதியம் 1.45 மணிக்கு சென்னை தொழிலதிபர் சுரேந்தர்குமார் கேளடா, தி.மு.க., ஒன்றிய செயலாளர் வசந்தம் கார்த்திகேயன், தொழிலதிபர்கள் சுபாஷ்சந்த் ஜெயின், திலீப்குமார்கேளடா ஆகியோர் வடம் பிடித்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.அலங்கரிக்கப்பட்ட யானை, குதிரைகள் ஊர்வலமாக சென்றன. செண்டமேளம், தாரை தப்பட்டை, மேளதாளம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து தேரை முக்கிய வீதி வழியே இழுத்து சென்றனர். இன்று திரவுபதியம்மனுக்கு தேர் திருவிழா நடக்கிறது. முன்னாள் எம்.எல்.ஏ., மூக்கப்பன், முன்னாள் ஒன்றிய சேர்மன்கள் வசந்தம் காந்திமதி கண்ணன், காமராஜ், வக்கீல் வெங்கடாசலம், குமார், ராஜவேல், ராஜ்முகமது, அண்ணாதுரை, எத்திராஜ், மலையரசன், பெருமாள், சுப்பு இளங்கோவன், பாலகிருஷ்ணன், முகமதுஅலி, சாமிதுரை, பாலு மற்றும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.