பதிவு செய்த நாள்
29
ஜூலை
2014
12:07
நாமக்கல்: கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவிலில், ஆடிப்பெருக்கு விழா, ஜூலை, 31ம் தேதி துவங்கி, ஐந்து நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாமக்கல் அடுத்த, கொல்லிமலையில், பிரசித்தி பெற்ற அறப்பளீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஸ்வாமி, அறம் வளர்த்த நாயகி உடனுறையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், ஆடி 18ம் பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா, ஜூலை, 31ம் தேதி துவங்கி, ஐந்து நாட்கள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, ஜூலை, 30ம் தேதி இரவு, 8 மணிக்கு கிராம சாந்தியுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. 31ம் தேதி காலை, 9 மணிக்கு கொடியேற்றப்படுகிறது. 11 மணிக்கு ஸ்வாமி உட்பிரகாரம் உலா வருதல், மாலை, 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு, 7 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆகஸ்ட், 1ம் தேதி காலை, 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை, 5 மணிக்கு சோமஸ்கந்தர் ரிஷப வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. ஆகஸ்ட், 2ம் தேதி மாலை, 6 மணிக்கு ஸ்வாமி கல்யாண உற்சவம், இரவு, 8 மணிக்கு ஸ்வாமி வீதி உலா, வாணவேடிக்கை நடக்கிறது. ஆகஸ்ட், 3ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு சுந்திரசேகரர் அம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா, பகல், 2 மணிக்கு திருத்தேர் உற்சவம் தீர்த்தவாரியும் கோலாகலமாக நடக்கிறது. ஆகஸ்ட், 4ம் தேதி காலை, 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால், இந்து அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், தொழில் துறை அமைச்சர் தங்கமணி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால், எம்.பி., சுந்தரம், கலெக்டர் தட்சிணாமூர்த்தி, எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், சாந்தி, மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் காந்திமுருகேசன், எஸ்.பி., செந்தில்குமார், மாவட்ட வன அலுவலர் பத்மாவதி உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.