பதிவு செய்த நாள்
30
ஜூலை
2014
01:07
கும்பகோணம்: திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி கோவிலில், 66 ஆண்டுகளுக்கு பின், நடந்த ஆடிப்பூர தேரோட்டத்தில், திரளான பக்தர்கள், தேர் வடம் பிடித்து இழுத்தனர். கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில், திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான பெருநலமாமுலையம்மை உடனாய மகாலிங்கபெருமான் கோவில் உள்ளது. இங்கு, 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளது. வரகுணபாண்டியனின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற சிறப்பு வாய்ந்த தலம். சிறப்புகள் பெற்ற இத்தலத்தில், ஆண்டுதோறும் ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு, கடந்த, 22ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அன்று முதல் தினமும், காலை அம்பாள் வீதியுலா நடந்தது. 63 ஆண்டுகளுக்கு பின், தேர் திருப்பணிக்கமிட்டி மூலம் முதலில் ஸ்வாமி தேரும், தொடர்ந்து அம்பாள் தேர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் தேர்களும் திருப்பணி செய்யப்பட்டு, கடந்த, இரண்டு ஆண்டுகளாக தைப்பூச பெருவிழாவில் தேரோட்டம் நடந்தது. இந்த ஆண்டு முதல்முதலாக, ஆடிப்பூர ஸ்ரீசக்கர தேரோட்டம் நேற்று நடந்தது. ஆடிப்பூர மரத்தேரோட்டத்தை, 66 ஆண்டுகளுக்கு பின் நேற்று காலை, 10.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம், 24வது குருமகாசன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் தொடங்கி வைத்தார். கட்டளை தம்பிரான் சுப்ரமணியத்தம்பிரான் சுவாமிகள், ஆதீன பொதுமேலாளர் மகாலிங்கம், போலீஸ் டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன், துணைத்தலைவர் முருகேசன், சூரியனார் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் மகேஷ்சர்மா, ராஜசேகரன், தமிரசன், ரவி உள்ளிட்ட திரளான பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தேர் நான்கு வீதிகளிலும் வலம் வந்த தேர், மதியம், 2.30 மணிக்கு நிலையை அடைந்தது. இன்று இரவு சுவாமி, அம்பாள் வெள்ளிரத புறப்பாடு நடக்கிறது.