பதிவு செய்த நாள்
30
ஜூலை
2014
02:07
திருவாலங்காடு : திருவாலங்காடு, பத்ரகாளியம்மன் கோவிலில், படுகள உற்சவம் நேற்று துவங்கியது. முதல் நாளில், 108 பால்குடம் ஊர்வலம் நடந்தது. திருவாலங்காடு, பத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி மாதம், அமாவாசை முடிந்து நான்காம் நாளில், பத்ரகாளியம்மன் படுகள எட்டு நாள் உற்சவம், நேற்று துவங்கியது.முதல் நாளான நேற்று, காலை, 10:30 மணிக்கு, 108 பால்குடம் ஊர்வலம் வடாரண்யேஸ்வரர் கோவில் முன்புள்ள மண்டபத்தில் பூஜை நடத்தி, ஊர்வலமாக புறப்பட்டு பத்ரகாளியம்மன் கோவில் வளாகம் வந்தடைந்தது. தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு, 108 குடம் பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, உற்சவர் அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும், 5ம் தேதி (ஆக., 5) வரை தினமும் காலையில், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும். இரவு, 8:00 மணிக்கு, உற்சவர் அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 6ம் தேதி அதிகாலை, பத்ரகாளியம்மன், அசுர்களான சும்பன், நிசும்பன் ஆகியோரை வதம் செய்யும் படுகள நிகழ்ச்சியுடன் உற்சவ நிகழ்ச்சி நிறைவடைகிறது.