திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூரில் சுந்தரர் குருபூஜை விழா வரும் 2ம் தேதி துவங்குகிறது.திருவெண்ணெய்நல்லூரில் பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் உள்ளது. சுந்தரரை ஆட்கொண்டு அருளாசி வழங்கிய சிறப்புடைய இக்கோவிலில் ஆண்டுதோறும் சுவாதி நட்சத்திரத்தில் சுந்தரருக்கு குருபூஜை நடக்கிறது. இதையொட்டி வரும் 2ம் தேதி காலை 8:00 மணிக்கு சுந்தரர் திருமணக்கோலத்தில் எழுந்தருளுதலும், காலை10:00 மணிக்கு சிவபெருமான் அடிமை சாசனம் காட்டும் நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 11:00 மணிக்கு தடுத்தாட்கொண்ட புராணம் குறித்து ஆன்மிக சொற்பொழிவும், மதியம் 12:00 மணிக்கு திருவீதியுலாவும் நடக்கிறது. மதியம் 1:00 மணிக்கு திருஅருட்டுறைநாதன் அருட்சபையினரால் அருட்பிரசாதம் வழங்கப்படுகிறது. மறுநாள்(3ம்தேதி) காலை 11:00 மணிக்கு 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சுந்தரருக்கு குருபூஜை விழாவும், பகல் 12:30 மணிக்கு அன்னத் தால் லிங்கம் அமைத்து மகேசுவரபூஜையும், மதியம் 1:00 மணிக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. தொடர்ந்து மாலை 3:00 மணிக்கு சிவதீர்த்தத்தில் சுந்தரர், முதலை வாயிலிருந்து பிள்ளை எடுக்கும் ஐதீக நிகழ்ச்சியும், இரவு 9:00 மணிக்கு சுந்தரர் திருவீதியுலாவும் நடக்கிறது.