பதிவு செய்த நாள்
30
ஜூலை
2014
02:07
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், நேற்றிரவு கம்பம் நடுதல் விழா கோலாகலமாக நடந்தது. சேலத்தில், எட்டுப்பட்டிக்கும், தலைமை காவல் தெய்வமாக அருள்பாலிக்கும், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், ஆடிப்பெருவிழா, கடந்த, 22ம் தேதி இரவு, 8 மணியளவில், பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. பூச்சாட்டுதலுக்கு, அடுத்து வரும், செவ்வாய்க்கிழமையான நேற்று, "கம்பம் நடுதல் விழா கோலாகலமாக நடந்தது. அதையொட்டி, பெரியமாரியம்மனுக்கு, பட்டு உடுத்தி, புஷ்ப அலங்காரத்தில் காட்சியளித்தார். இரவு, 7.30 மணியளவில், கோவில் பூசாரி அர்த்தனாரி தலைமையில், வேம்பால் ஆன ஆறு அடி உயர முப்புரி கம்பம் கொண்டு வரப்பட்டு, அம்மன் சன்னதியில் பூஜைகள் நடந்தது. அதன்பின், மதுரை வீரனுக்கு கற்பூர தீபாராதனை நடத்தி, முப்புரி கம்பத்துக்கு, மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, வேப்பிலை, பூக்கள் சகிதமாக அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடந்தது. அதையடுத்து, பக்தர்கள் புடைச்சூழ, பம்பை, மேளம் உள்ளிட்ட மங்கள இசை முழங்க, முப்புரி கம்பம், கோவில் உட்பிரகாரத்தில், மும்முறை வலம் வந்ததும், பலி பீடத்தின் முன், அம்மன் நேரெதிரே, சரியாக இரவு, 8.28 மணிக்கு, கம்பம் நடப்பட்டது. திரண்டிருந்த பக்தர்கள் மெய்சிலிர்க்க, அம்மனை வழிப்பட்டனர். முப்புரி கம்பத்தில், கண் திறப்பு நிகழ்ச்சி நடந்ததும், அம்மனுக்கு, "திரு மங்கள நாண் அணிவித்து, திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. கம்பம் நடுதல் நிகழ்ச்சியையொட்டி பக்தர்கள், பொங்கலிட்டு, ஆடு, கோழி பலியிட்டு, நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.