பதிவு செய்த நாள்
30
ஜூலை
2014
02:07
ப.வேலூர்: நன்செய் இடையாறு மாரியம்மன் கோவிலில், ஆகஸ்ட், 1ம் தேதி, 1,008 பால் குட அபிஷேக விழா கோலாகலமாக நடக்கிறது. ப.வேலூர் அடுத்த நன்செய் இடையாறில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் ஆடிமாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை, 1,008 பால்குட அபிஷேகம் வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு விழா, ஆகஸ்ட், 1ம் தேதி கோலாகலமாக நடக்கிறது. விழாவை முன்னிட்டு, இன்று (ஜூலை, 30) காலை, 7 மணிக்கு, கணபதி, நவக்கிரகம் மற்றும் லட்சுமி ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து, திருச்சி சமயபுரத்தில் இருந்து நன்செய் இடையாறு வரை குடை பவனியும், அம்மன் ஊர்வலமும், இரவு, 7 மணிக்கு, 1,008 திருவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை (ஜூலை, 31) காலை, 8 மணிக்கு, உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் மகா அவஹந்தி யாகம், பூர்ணாகுதி நடக்கிறது. மாலை, 4 மணிக்கு, ஜேடர்பாளையத்தில் இருந்து நன்செய் இடையாறு வரை, காவிரி ஆற்றில் பரிசல் மூலம் ஸ்வாமி பவனி வந்து, பக்தர்களுக்கு அரும்பாலிக்கிறார். ஆகஸ்ட், 1ம் தேதி, காலை, 7 மணிக்கு காலபூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை நடக்கிறது. அதை தொடர்ந்து, 1,008 பால்குட அபிஷேகம் அம்மனுக்கு செய்யப்படுகிறது. மாலை, 6 மணிக்கு, மகா மாரியம்மன் திரு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. அதை தொடர்ந்து, ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பால்குட அபிஷேகத்தன்று, காலை முதல், மாலை வரை பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, கோவில் பரம்பரை அறங்காவலர்கள், எட்டுபட்டி ஊர் தர்மகர்த்தாக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.