ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று ஆடிப்பூர தேரோட்டம் நடந்தது. இக்கோயிலில் ஆடிப்பூர திருவிழா, கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கருடாழ்வார் முத்திரை பதிக்கப்பட்ட கொடி நான்கு ரதவீதிகளும் சுற்றி வரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு, விஜி பட்டரால் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.இரவில், பதினாறு வண்டி சப்பரத்தில் ஆண்டாள்,ரெங்கமன்னார் பவனி நடந்தது.ஐந்தாம் நாளான்று மங்களாசாசனம், இரவு 10 மணிக்கு ஐந்து கருட சேவை நடந்தது. ஆடிமாதம் பூர நட்சத்திரமான நேற்று அதிகாலை 5 மணிக்கு, ஆண்டாள்,ரெங்கமன்னார் தேரில் எழுந்தருள, காலை 9.05 மணிக்கு தேரோட்டம் நடந்தது. தேரை பக்தர்கள் கோவிந்தா! கோபாலா! கோஷத்துடன் இழுத்தனர். தேர் நான்கு ரதவீதிகளும் சுற்றி வந்து பகல் 12.00 மணிக்கு நிலையை வந்தடைந்தது. கலெக்டர் ஹரிஹரன், எஸ்.பி.,மகேஷ்வரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.