திருநெல்வேலி: சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.தமிழகத்தில் சிறப்பு பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில் திகழ்கிறது. சிவன், விஷ்ணு இருவரில் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. இதனால் மனம் வருந்திய கோமதிஅம்பாள், சிவன், விஷ்ணு இருவரும் ஒன்றாக பக்தர்களுக்கு காட்சியளிக்க வேண்டும் என்று சங்கரலிங்க சுவாமியிடம் வேண்டினார். அம்பாளின் கோரிக்கையை சுவாமி ஏற்றார். தபசு கோலத்தில் இருந்த அம்பாளுக்கு , ""அரியும், சிவனும் ஒன்று என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் பொருட்டு தனது உடலின் வலதுபகுதியை சிவனாகவும், இடதுபுறத்தை விஷ்ணுவாகவும் மாற்றி சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார். புன்னை வனமான சங்கரன்கோவிலில் நடந்த இந்த அரிய காட்சிதான் ஆண்டுதோறும் ""ஆடித்தபசு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா நேற்று 30ம் தேதி காலை 4.30 மணி துவங்கி 5 மணிக்குள் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கோமதிஅம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் திருவிழாவிற்கான கொடியை ஏற்றினர். கொடிமரத்தில் தர்ப்பைபுல் மற்றும் பட்டுத்துணி சுற்றப்பட்டது. கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனையான ""சோடச தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். 12 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு அபிசேகங்கள், தீபாராதனை, வீதி<<உலா நடக்கிறது. 9ம் திருநாளில் ஆகஸ்ட் 7ம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஆகஸ்ட் 9ம் தேதி 11ம் திருநாளில் மாலையில் தபசுக்காட்சி நடக்கிறது. அன்றைய தினம் நெல்லை மாவட்டத்திற்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் பங்கேற்கிறார்கள். வேறு எந்த ஊரிலும் இல்லாத நிகழ்வாக, சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரங்களில் விவசாயிகள் <உற்பத்தி செய்யும் பஞ்சு, மிளகாய்வத்தல், வெங்காயம் போன்ற வேளாண் உற்பத்தி பொருட்களை உயரமான கட்டிடங்களில் இருந்து சுவாமி வீதியுலா வரும்போது வீசியெறிவார்கள். இதன் மூலம் ஆண்டுதோறும் தங்களின் வேளாண் உற்பத்தி சிறக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாகும்.