பதிவு செய்த நாள்
31
ஜூலை
2014
02:07
நங்கவள்ளி: தாரமங்கலம், கைலாசநாதர் கோவில் தெப்பக்குளத்திலிருந்து, சிலை மற்றும் பூஜை மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. தாரமங்கலத்தில், பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. தாரமங்கலம் பஸ் ஸ்டாண்டையொட்டி, கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான சிவகங்கை தீர்த்த தெப்பக்குளம் அமைந்துள்ளது. தெப்பக்குளத்தை தூர்வாரும் பணி, ஒரு மாதமாக நடந்து வருகிறது. நேற்று மாலை, தெப்பக்குளத்தை தூர் வாரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, சேற்றில் மூழ்கி கிடந்த, சிதைந்த நிலையில் இருந்த பூஜை மணி ஒன்றும், உடைந்த நிலையில் ஆண் சிலை ஒன்றும் சிக்கியது. இது குறித்து கோவில் நிர்வாகத்துக்கு, தொழிலாளர்கள் தெரிவித்தனர். கோவில் நிர்வாகிகள், ஓமலூர் தாசில்தாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தாசில்தார் கற்பகவள்ளியிடம், சிலை மற்றும் பூஜை மணியை கோவில் நிர்வாகிகள் ஒப்படைத்தனர். கண்டெடுக்கப்பட்ட சிலை, 3.5 கிலோ எடையும், பூஜை மணி அரைக்கிலோ எடையும் உள்ளது. தெப்பக்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிலை மற்றும் பூஜை மணி, வெண்கலமா அல்லது ஐம்பொன்களால் ஆனதா என, அதிகாரிகளால் உறுதிபட கூற முடியவில்லை.