பதிவு செய்த நாள்
05
ஆக
2014
10:08
சென்னிமலை: சென்னிமலை, மலை மீதுள்ள ஸ்ரீசுப்பிரமணிய ஸ்வாமிக்கு, 600 குடம் பாலபிஷேக பெருவிழா நேற்று நடந்தது. சென்னிமலையில் எழுந்தருளி உள்ள புகழ்பெற்ற முருகன் கோவில் மலை மீது அமைந்துள்ளது. இங்குள்ள முருகப்பெருமான், ஸ்ரீசுப்பிரமணியர் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.திருபுகழை தந்த அருணகிரி நாதருக்கு, படிகாசு நல்கியதும், புண்ணாக்கு சித்தர், செங்கந்துறை பூசாரி, வேட்டுவபாளையம் பூசாரி போன்ற முனிவர்களுக்கு, திருகோல காட்சி தந்ததும், கந்தர் சஷ்டி கவசம் அரங்கேறியதும், 1,320 படிகள் வழியாக, இரட்டை மாட்டு வண்டி மலையேறிய சிறப்புகள் கொண்ட, மலையாக, சென்னிமலை விளங்குகிறது. சென்னிமலை மலை மீதுள்ள
சுப்பிரமணியருக்கு, ஆண்டு தோறும், ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தில், சென்னிமலை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில், பாலபிஷேக பெருவிழா நடந்து வருகிறது. நேற்று, 47வது ஆண்டாக, 600 குடம் பாலபிஷேக விழா நடந்தது. காலை, 7.35 மணிக்கு, 600 திருப்பாற் குடங்கள், சென்னிமலை நகரில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து புறப்பட்டு, மேள, தாளத்துடன், திருவீதி வலம் வந்து, மலை கோவிலை சென்றடைந்தது. காலை, 11.40 மணிக்கு, மலை மேல் சுப்பிரமணியருக்கு, பாலபிஷேகம் துவங்கி மதியம், 1.30 வரை நடந்தது. இரண்டு மணிக்கு சிறப்பு அலங்காரத்தில், மகா தீபாராதனை நடந்தது. 2.30 மணிக்கு உற்சவ மூர்த்தி பிரகார உலாக்கட்சி நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும், மலை மீது அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கைத்தறி
மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் முத்துசாமி, துணை தலைவர் ஈஸ்வர்மூர்த்தி, செயலாளர் ராமலிங்கன், பொருளாளர் சாமிநாதன் மற்றும் பலர் செய்திருந்தனர்.