பதிவு செய்த நாள்
06
ஆக
2014
11:08
தூத்துக்குடி: பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலய விழாவில், நேற்று இரவு தேர் பவனி நடந்தது. லட்சக்கணக்கானவர்கள் திரண்டு மாதாவை தரிசனம் செய்தனர்.தூத்துக்குடியில் உள்ள 430 ஆண்டுகள் பழமையான பனிமய மாதா ஆலயத்தில், கடந்த ஜூலை 26 ல் திருவிழா கொடியேற்றம் நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதத்தினரும் விழாவில் பங்கேற்றனர்.நேற்று காலை 7:00 மணிக்கு பெருவிழா கூட்டுத்திருப்பலி, பிஷப் இவான் அம்புரோஸ் தலைமையில் நடந்தது. பகல் 12:00க்கு சிறப்பு நன்றி திருப்பலி மதுரை பிஷப் பீட்டர் பெர்ணான்டோ தலைமையிலும், மாலை 5:30 க்கு ஆடம்பரத் திருப்பலி முதன்மை பாதிரியார் செல்வராஜ் தலைமையிலும் நடந்தது. இரவு 7:00 மணிக்கு மாதா அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நகர வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது லட்சக்கணக்கானவர்கள் திரண்டு தரிசித்தனர். இரவு 10:00 மணிக்கு குடும்பங்கள் ஒப்புக் கொடுத்தல் நிகழ்ச்சியும், நற்கருணை ஆசீரும் நடை பெற்றது. தேர் பவனியால், ஆலய பகுதியில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. போலீசார், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இன்று (ஆக., 6) காலை 5:30 க்கு முதல் திருப்பலியும், 6:30 க்கு2ம் திருப்பலியும், கொடியிறக்க நிகழ்ச்சியும் நடக்கிறது. அத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.