பதிவு செய்த நாள்
22
ஆக
2014
12:08
வாழப்பாடி; வாழப்பாடி அருகே பிரசித்தி பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் தேரோட்டம், 200 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வாழப்பாடி அடுத்த அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதிக்கரையில், வரலாற்று சிறப்பு மிக்க பஞ்சபூத சிவன் திருத்தலங்களில் முதல்தலமான, பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் பிரசித்தி பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் மரத்தேர், 200 ஆண்டுக்கு முன் சிதிலமடைந்து போனதால், தேரோட்டம் நடக்கவில்லை. கடந்த, 2010ம் ஆண்டு, 25 லட்சம் ரூபாய் செலவில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பிரம்மாண்டமான மரத்தேர் செய்து, வெள்ளோட்டம் விடப்பட்டது. பக்தர்களின் வேண்டுகோளையடுத்து, 200 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று வெகுவிமரிசையாக, தேரோட்டம் நடந்தது. நேற்று காலை, 11.30 மணிக்கு தான்தோன்றீஸ்வரர் சன்னிதானத்தில் இருந்து உற்சவ மூர்த்திகளை திருத்தேரில் ஏற்றி, தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி., மாதவன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேரோட்டத்தையொட்டி, சிவனின் புகழ்பாடியபடி சிவனடியார்கள், மேளவாத்தியங்களை முழங்கிச் சென்றனர்.