நாகப்பட்டினம்: நாகையில் 455 ஆண்டுகள் பழமையான மாதரசி மாதா தேவாலய ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு நடந்த பெரிய சப்பர பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாகை,கடற்கரை சாலையில் அமைந்துள்ளது மாதரசி மாதா தேவாலயம். 455 ஆண்டுகள் பழமையான இத்தேவாலயம் போத்துக்கீசியர்களால் கட்டப்பட்டது. பின் நாகை டச்சுக்காரர்கள் ஆதிக்கத்திற்கு உட்பட்டப் போது, தேவாலயத்தில் உள்ள மாதா சிலையை டச்சுக்காரர்கள் சேதப்படுத்தி விடுவார்கள் என்ற அச்சத்தில் பொதுமக்கள் மாதா சிலையை பெட்டி ஒன்றில் வைத்து மூடியுள்ளனர். பெட்டி சிறியதாக இருந்ததால் மாதாவின் தலை மட்டும் பெட்டியின் வெளியில் இருந்துள்ளது.பெட்டியை மக்கள் புதர் பகுதியில் மறைத்து வைத்துள்ளனர். மறுநாள் காலை பார்க்கும் போது மாதாவின் தலைப்பகுதி சாய்ந்த நிலையில் பெட்டியினுள் இருப்பதையும், பெட்டி மூடியிருந்ததையும் பார்த்து அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இன்றும் கோவிலில் தலை சாய்ந்த நிலையில் மாதரசி மாதா பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.பழமையான இக்கோவிலின் ஆண்டுத்திருவிழா கடந்த 14 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் தேவாலயத்தில் திருப்பலி, செபமாலை,மறையுரை மற்றும் தேர்பவனி நடந்தது.முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு, கூட்டு பாடல் திருப்பலிக்கு பின் பெரிய சப்பர பவனி நடந்தது. மறைமாவட்ட பாதிரியார் செல்வம் செபஸ்தியான்,உதவி பாதிரியார் ஆண்டோ ஜேசுராஜ் பெரிய சப்பரத்தை புனிதம் செய்து, பவனியை துவக்கி வைத்தனர்.அலங்கரிக்கப்பட்ட பெரிய சப்பரத்தில் மாதரசி மாதா முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பெரிய சப்பர பவனியிலும் தொடர்ந்து நடைபெற்ற வானவேடிக்கையிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.